யூதாஸ்களை கயவர் என்றே
எல்லோரும் அறிந்து வைத்திருக்கிறார்கள்;
ஆனால் சிலர் யூதாஸ்களை
வேறுபடுத்தியும் அறிகிறார்கள்;
மொஹஞ்சதாரோவைச் சேர்ந்த யூதாஸ் எனில்
கழுவில் ஏற்றத் துடிக்கிறார்கள்;
லோத்தல் யூதாஸ் என்றால்
அரசனாக்குவது தகும் என விவாதிக்கிறார்கள்;
கங்கைச் சமவெளித் தவளைகள்
சிந்துச் சமவெளி வாரிசுகளானால்
வேறு என்ன நடக்கும்?
அப்பாவிகளை நூற்றுக் கணக்கில் கொன்று குவிப்பதில்
வேறுபாடு காண கற்றுக் கொடுக்கும்.
கடைசி விருந்து அருந்தியவர்களால் மட்டுமே
யூதாஸ்களை காட்டிக் கொடுக்க முடிகிறது;
கசந்து போவதன் மூலமே
கடைசி விருந்து என்பது அறியப்படுவதாலும்;
முன்னம் பலமுறை கசக்காத
விருந்து அருந்தியவர்கள் என்பதாலும்;
வலப்புறமும், இடப்புறமும் திருடர்கள் சூழ
கதறுகிறார்கள், காட்டிக் கொடுத்தவர்கள்.
போருக்குத் தயாராகிறார்கள்,
அப்பாவிகளின் குருதிகளால்
அரசபாட்டை அமைக்கும் யூதாஸ்கள்
தேர்க்கால்களின் மீதேறி ஒருவன்;
சொர்க்கத்திற்கு போவதாகச் சொல்லும்
பொய்க்கால் குதிரை மீதேறி மற்றொருவன்.
No comments:
Post a Comment